கோலாலம்பூர், ஜூன் 22 :
அமைச்சரவையில் தனது நிலைப்பாடு குறித்து விவாதிக்க பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைச் சந்திக்க, தான் இன்னும் காத்திருப்பதாக டத்தோ ஸூரைடா கமாருடின் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று புதன்கிழமை (ஜூன் 22) காலையில் தானும் பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கும் இடையில் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என்பதையும் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சருமான அவர் உறுதிப்படுத்தினார்.
“இன்று காலை நடந்தது அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அங்கு எந்த விவாதமும் இடம்பெறவில்லை என்பதால், பிரதமரை சந்திக்கும் தேதிக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன்” என்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஸூரைடாவை சந்தித்தபோது அவர் கூறியதாக சினார் ஹரியன் மேற்கோள்காட்டியிருந்தது.
கடந்த வியாழன் (ஜூன் 16) செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், புதன் கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக ஸூரைடாவை சந்தித்து அவரது நிலைப்பாட்டை விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.