பாரிஸ், ஜூலை 28:
எரிபொருள் பிரச்சினை உலகை எங்கோ கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.
கடந்த சில நூற்றாண்டுகளில் வேகமாக முன்னேறிய உலகம், இப்போது பின்னோக்கித் திரும்புகிறதோ என தோன்றுகிறது.
பிரான்ஸ் நாட்டில் சமையலுக்கு, குறிப்பாக உனவுப்பொருட்களைப் பொரிக்கப் பயன்படுத்திய சமையல் எண்ணெயை, வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் சிலர் ஏற்கனவே பயன்படுத்திய சமையல் எண்ணெயை டீசல் இயந்தியங்களில் பயன்படுத்தி வருவதாக அரசல் புரசலாக கூறப்படுவதுண்டு. ஆனால், அப்படிச் செய்வது இப்போதைக்கு சட்டப்படி குற்றமாகும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், அப்படி பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதகாக அறியமுடிகிறது.
இந்த செய்தியைக் கேட்டதும் உடனே சிக்கன் அல்லது உருளைக்கிழங்கு பொறித்த எண்ணெயை அப்படியே கொண்டு வாகனத்தில் ஊற்றிவிடாதீர்கள்!
காரணம், அந்த எண்ணெய் சுத்திகரிக்கப்படவேண்டும், அத்துடன், அது டீசலுடன் சேர்த்துத்தான் பயன்படுத்தப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.