புத்ராஜெயா:
DAP கட்சி ஒருபோதும் மலாய்க்காரர்களுக்கு எதிரானது இல்லை. நாம் ஒருபோதும் நண்பரை முதுகில் குத்தவோ அல்லது பேச்சை மாற்றி மாற்றி பேசும் கட்சியும் அல்ல என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
“எனவே, அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும், மலாய் சமூகமும், ஒற்றுமை அரசாங்கத்தில் DAP இருப்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை” என்றார் அவர்.
DAP கட்சி இஸ்லாம் மற்றும் மலாய் மொழியின் அந்தஸ்தை அங்கீகரித்துள்ளது. ஆனால் அதன் அரசியலமைப்பு எந்த இனத்திற்கும் பிரத்தியேகமானது அல்ல என்று அவர் மேலும் கூறினார்.
DAPயைக் கண்டு மலாய்க்காரர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. DAP அதன் உறுப்பு கட்சிகளுக்கு விசுவாசமாக உள்ளது. மாறாக ஒரு போதும் மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சியில் ஈடுப்படாது.
கடந்த பொது தேர்தலில் DAPயில் உள்ள மலாய் உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
DAP மலாய்க்காரர்களுக்கு எதிரி அல்ல என்பதை இன்று மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று லோக் கூறினார்.