நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் பத்துக்கும் மேற்பட்ட நாட்களே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் பெரா தொகுதியில் போட்டியிடும் தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளரான பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமைத்துவம் மீது இந்தோனேசிய ஊடகத்தின் கவனம் திரும்பியுள்ளது.
ஆரம்பம் முதல் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நிதானமான உருமாற்றத்தைக் கொண்டிருப்பதாக இந்தோனேசிய ஊடகங்கள் கூறியுள்ளன.
குறிப்பாக பால்மரம் வெட்டும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்த அவர், மலேசியாவின் உயர்நிலைப் பதவியை அடைந்துள்ளார். அதற்கு அவரின் கடின உழைப்பும் முக்கியக் காரணமாக அமைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யூடியூப் அலைவரிங்யைில் ஆஸ்ட்ரோ சேனல் எனும் பக்கத்தில் இந்தோனேசியாவின் ஊடகப் பிரபலம் இஸ்ரோ கமால் ரொஹான் தகவல் பகிர்ந்துள்ளார்.
தேர்தல் சமயத்தில் பிரபலமாகும் கூற்றுகள்
தேர்தல் சமயத்தில் பலதரப்பட்ட கருத்துகளும் செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறித்தும் தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் குறித்தும் பவலாகப் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக தேசிய முன்னணி இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றால் மற்றொரு நபர் பிரதமர் ஆக்கப்படுவார் என ஒரு சில தரப்பினர் கூறி வருகின்றனர். ஆயினும் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர்.
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இம்முறை தேர்தலில் தேசிய முன்னணியின் போஸ்டர் போய் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்தான். இதில் மாற்றம் கிடையாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதேபோல் பராமரிப்புப் பிரதமரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமர் வேட்பாளர் தாம்தான் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுபோன்ற சர்ச்சைகள் குறித்து பிரச்சார நேரத்தில் பிரதமர் உள்ளிட்ட சிலர் வெளியிட்ட கருத்துகள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளன.
* இந்த அரசாங்கத்தைத் தேர்வு செய்தால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். நான் யாரையும் தாக்கிப் பேசீவதில் கவனம் செலுத்தப் போவதில்லை.
மக்களுக்கு என்ன வேண்டும்? நாம் என்ன திட்டங்களை முன்வைக்கின்றோம் என்பதுதான் முக்கியம் – பிரதமர்
* பிரதமர் வேட்பாளராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை முன்னிருத்தும் முடிவை கட்சி முடிவெடுத்திருக்கிறது. இந்த முடிவுக்கு நாடு தழுவிய அளவில் உள்ள அம்னோ தொகுதிகளில் 4க்கு 3 பகுதியினர் ஆதரவு வழங்கியுள்ளனர் – பண்டார் துன் ரங்சாக் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ ரிஸால்மான் மொக்தார்
* நாங்கள் தரவின் அடிப்படையில் பிரச்சாரம் செய்கின்றோம். இளம் வாக்காளர்களுக்கு என்ன தேவையோ அதை நான் செய்வேன். – பெரா தொகுதியில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்
* ஒரு வாக்கு தேசிய முன்னணிக்கு. ஒரு வாக்கு ஸாஹிட்டிற்கு என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சியினரின் வதந்தியே. – பிரதமர் உறுதி
* நாம் என்ன செய்தாலும் அதனை முழு ஆர்வத்துடன் செய்ய வேண்டும். அப்போதுதான் களைப்பு மறந்து நாமும் ஆர்வத்துடன் இருப்போம். – டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நம்பிக்கை