போரில் ரஷிய இராணுவ வீரர்களின் மனைவிகள் கற்பழிப்பை ஊக்குவிக்கின்றனர்- உக்ரைன் அதிபரின் மனைவி குற்றச்சாட்டு

லண்டன். நவம்பர் 30:

போரில் ரஷிய இராணுவ வீரர்களின் மனைவிகள் உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஊக்குவிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

போரில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் பேசிய உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கி கூறுகையில், ரஷிய படைவீரர்கள் உக்ரைன் நாட்டின் மீது படையெடுப்பதில் ‘முறைகேடாகவும், வெளிப்படையாகவும் கற்பழிப்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்’ என்றார்.

“பாலியல் வன்முறை என்பது ஒருவரின் மீது ஆதிக்கத்தை நிரூபிக்க மிகவும் கொடூரமான, மிருகத்தனமான வழியாகும். மேலும் இதுபோன்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, போர்க்காலத்தில் சாட்சியமளிப்பது கடினம், ஏனெனில் யாரும் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. ரஷிய வீரர்களின் மனைவிகள் பாலியல் வன்கொடுமையை எதிர்க்கவில்லை. ரஷிய வீரர்கள் இதைப் பற்றி மிகவும் வெளிப்படையாக இருப்பதை நாங்கள் காண்கிறோம்: அவர்கள் தங்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார்கள், நாங்கள் அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களை கைப்பற்றி உள்ளோம்.

“உண்மையில், ரஷிய படைவீரர்களின் மனைவிகள் இதை ஊக்குவிக்கிறார்கள், ‘போ, அந்த உக்ரேனியப் பெண்களைப் பலாத்காரம் செய், இதை என்னுடன் பகிர்ந்து கொள்ளாதே, என்னிடம் சொல்லாதே’ என்று கூறுகிறார்கள்” என அவர் கூறினார்.

இதுகுறித்து சர்வதேச சமூகத்திடம் முறையிட்ட உக்ரைன் முதல் பெண்மணி, இதை ஒரு போர்க் குற்றமாக அங்கீகரிப்பது மற்றும் குற்றவாளிகள் அனைவரையும் பொறுப்புக்கூற வைப்பது மிகவும் முக்கியமானது. இத்தகைய குற்றங்களுக்கு ரஷிய வீரர்களுக்கு எதிராக சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here