புத்ராஜெயா, டிசம்பர் 5 :
மலேசியாவின் முதலாவது பெண் சுகாதார அமைச்சரான டாக்டர் சலிஹா, இன்று காலை தனது அதிகாரப்பூர்வ பணிகளை தொடங்கினார்.
முன்னதாக, இன்று காலை 8.30 மணிக்கு சுகாதார அமைச்சை வந்தடைந்த டாக்டர் சலிஹாவை, அதன் தலைமைச் செயலாளர் டத்தோ ஹர்ஹீட் சிங், நிர்வாக அதிகாரிகள், உயர்மட்ட தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
சுகாதார அமைச்சை வழிநடத்துவதில் முந்தைய அமைச்சர்களின் ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் உதவிகளை ஏற்கத் தயாராக இருப்பதாக அதன் அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா கூறினார்.
”இதற்கு முன்னர் இருந்த அமைச்சர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், பயன்படுத்தப்பட்ட கொள்கைகள் போன்றவற்றில் பரிந்துரை அல்லது கருத்து போன்ற எந்தவொரு உதவிகளையும் பெற நான் தயாராக இருக்கிறேன். எனினும், வழக்கம்போல புதிய அமைச்சராக நாங்கள் சுகாதார அமைச்சிடமிருந்து விளக்கங்களைப் பெறுவதோடு எந்தக் கொள்கைகளைப் பயன்படுத்த முடியும், சரிப்படுத்த வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆராய்வோம்,” என்றார்.
அதே வேளையில், நாட்டின் சுகாதாரச் சேவையை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளை தான் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.