அமெரிக்காவின் மத்திய அரசு, அரசாங்கத்துக்குச் சொந்தமான கைத்தொலைபேசி போன்ற கருவிகளில் சீனாவின் ‘டிக்டாக்’ செயலியைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று முன்தினம் நிறைவேற்றியது.
சீனக் கருவிகளையும் நிறுவனங்களையும் பயன்படுத்தி அமெரிக்காவை சீனா உளவுபார்க்கக் கூடும் என்ற தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
வட டக்கோட்டா, ஐயோவா உள்ளிட்ட பல அமெரிக்க மாநிலங்களில் சீனாவின் டிக்டாக் செயலிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மத்திய அரசாங்கத் துறைகள் பலவற்றிலும் இந்தச் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘டிக்டாக்’ செயலி ‘பைட்டான்ஸ்’ என்னும் சீன நாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது. அந்தச் செயலி மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களின் தரவுகளை சீன அரசாங்கத்திற்கு அந்த நிறுவனம் கொடுக்கலாம் என்ற அச்சமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.