தெரெங்கானு மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிங்கிட் 1,000 ரொக்க உதவி வழங்கப்படும் என்று மந்திரி பெசார் Ahmad Samsuri Mokhtar கூறினார். இன்று கோல தெரெங்கானுவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிலைமையை நாங்கள் கண்காணித்து வருவதால் சிறிது நேரம் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் ஜனவரி அல்லது பிப்ரவரியில் பண உதவியை பெறுவார்கள் என்றார்.
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த பண உதவி வழங்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு RM10,000 தொகை வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என்பதை உறுதிப்படுத்துவதும், தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதும் மாநில அரசாங்கத்தின் முன்னுரிமை என்று Samsuri கூறினார்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்புவதை உறுதி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மற்ற தேவைகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கிராம வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக் குழுக்களால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 44 நிவாரண மையங்களில் 1,651 குடும்பங்களைச் சேர்ந்த 6,356 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.