வீட்டில் ஏற்பட்ட தீ; புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது

ஆயிர் பாலோயில் உள்ள கம்போங் பாரிட் ஹாஜி எலியாஸில் உள்ள ஒரு வீட்டில், நேற்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகையை சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாற்றுத்திறனாளி பெண் (OKU) உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் நண்பகல் 1.30 மணியளவில் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், 48 வயதான பலியானவரின் உடலின் பல பகுதிகளில் தீக்காயங்களுடன் காணப்பட்டதாகவும் பொந்தியான் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஷோபி தாயிப் தெரிவித்தார்.

“தீ சமையலறையில் இருந்து பரவியதாக நம்பப்படுவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர், ஆனால் சம்பவத்திற்கான காரணத்தை பொந்தியான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தடயவியல் பிரிவு விசாரித்து வருகிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், பொந்தியான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தலைவர், துணை கண்காணிப்பாளர் அசார் அப்துல் ஜலீல் கூறுகையில், நேற்று மதியம் 12.27 மணிக்கு தனது துறைக்கு தீப்பரவல் தொடர்பில் ஒரு அழைப்பு வந்தது என்றார்.

அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும், தீ விபத்தில் ஒரு மாடி வீடு 70 சதவிகிதம் அழிந்து போயிருந்தது. பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி பெண் படுக்கையறையில் சரிந்த நிலையில் காணப்பட்டார். பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார், அங்கிருந்த சுகாதார குழுவினால் அந்தப்பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது ” என்று அவர் கூறினார்.

மேலும் நேற்று மாலை 3.15 மணியளவில் தீயை அணைக்கும் பணி முடிந்தது என்று அசார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here