வாஷிங்டன்:
பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். அதன்பின் டுவிட்டரில் ஊழியர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதோடு டுவிட்டர் புளூ திட்டத்தின் கீழ் பல்வேறு மாற்றங்களை அறிவித்தார். அந்த வரிசையில், டுவிட்டரில் மற்றொரு அதிரடி நடவடிக்கையை எலான் மாஸ்க் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் டுவிட்டரின் லோகோவை எலான் மாஸ்க் திடீரென்று மாற்றம் செய்துள்ளார். ஏற்கனவே அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்த நீலநிற குருவிக்கு பதில் நாய் (டாக்கி) சின்னம் தற்போது லோகோவாக மாற்றப்பட்டு இருக்கிறது.
ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் டுவிட்டர் லோகோவாக வைக்கப்பட்டுள்ளது. டாக்கி காயின் என்று அழைக்கப்படும் கிரிப்டோ கரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிட்காயின் போன்ற பிற கிரிப்டோகரன்சிகளை கேலி செய்யும் வகையில் 2013ம் ஆண்டு டாகி காயினுக்கு ஷிபா இனுவின் நாய் படம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 15-ந் தேதி எலான் மஸ்க் தனது டுவிட்டர் கணக்கில் ஷிபா இனுவின் நாய் படத்தை வெளியிட்டு டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சரியமாக இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.