பாகிஸ்தானில் இரு தரப்பினருக்கிடையே மோதல்; 16 பேர் பலி

பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கப்பாதை எல்லை நிர்ணயம் செய்வதில் நேற்று சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் என்ற இரு சமூகத்தினருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோகட் மாவட்டத்தில் பெஷாரில் இருந்து தென்மேற்கே 35 கி.மீ தொலைவில் உள்ள தர்ரா ஆடம் கெக் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் இருதரப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெஷாவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது வரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தர்ரா ஆதம் கேல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கேல் பழங்குடியினருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here