பினாங்கு மாநில சட்டமன்றம் ஜூன் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் கலைக்கப்படும் என்று சோவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மாநில தேர்தலை சந்திக்க உள்ள ஆறு மாநிலங்களில் இம்முடிவு ஒப்புக் கொள்ளப்பட்டதாக இன்று வெள்ளிக்கிழமை (மே 19) கொம்தாரில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பினாங்கு முதல்வர் இவ்வாறு கூறினார்.
ஆறு மாநில சட்டசபைகளின் கலைப்பு தேதிகள் வேறுபட்டாலும், பக்காத்தான் ஹராப்பான், அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆகியவை ஒரே நேரத்தில் மாநில தேர்தல்களுக்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில சட்டமன்றம் ஜூன் 26 அன்று தானாகவே கலைக்கப்பட உள்ளது மற்றும் ஆகஸ்ட் 26 க்குள் அதாவது 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதேபோல கிளாந்தான் மாநில சட்டசபை ஜூன் 28ம் தேதியும், திரெங்கானு ஜூலை 1ம் தேதியும், நெகிரி செம்பிலான் ஜூலை 2ம் தேதியும், கெடா ஜூலை 4ம் தேதியும், பினாங்கு ஆகஸ்ட் 2ம் தேதியும் தானாகவே கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.