துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தீவிர ரசிகை: கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது ‘கங்குவா’ என்ற படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தனது ரசிகைக்கு இரங்கல் தெரிவித்துள்ளது பலரையும் கலங்க செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் கடந்த ஆறாம் தேதி மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் வணிக வளாகத்திற்குள் இருந்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் ஹைதராபாத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணும் இறந்துள்ளார். இவர் நடிகர் சூர்யாவின் தீவிரமான ரசிகை.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சூர்யா, ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு இரங்கல் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஈடு செய்ய முடியாத இந்த இழப்பு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் உங்கள் மகள் ஐஸ்வர்யாவை இழந்ததும் துரதிர்ஷ்டமானது. ஒரு சக மனிதனாகவும் தந்தையாகவும் உங்கள் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்களின் மகளை நினைவு கூறும் போதெல்லாம் என் கைகளை பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மகள் வானத்தில் பிரகாசமான நட்சத்திரமாக இருந்து நாம் அனைவரையும் கவனித்து கொண்டிருக்கிறார் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here