ராமேஸ்வரி ராஜா
பீடோர், ஜூலை. 1:
பீடோரின் மூத்த கோயிலாக திகலும் இந்து தேவஸ்தான பரிபாலன சபா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நேற்றைய முன் தினம் விமரிசையாக நடைபெற்றது. இதில் மூவாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என ஆலயத்தின் தலைவர் ஆர். சுப்பிரமணியம் தெரிவித்தார்.
காலை 10.30 மணி முதல் 11.30 வரை சிம்ம லக்கினத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் சுந்தர சுந்தர விமானம், மூல மூர்த்தி சகிதம் பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் சுமூகமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள், விநாயகப் பெருமானின் பரிபூரண திருவருளை பெற்றனர் என நம்புகிறோம். அதே வேளையில், வருகைப் புரியும் பக்தர்கள் பண்பாட்டு அம்சங்களைக் கடைப்பிடித்து, சமய நெறிகளுக்கு உட்பட்டு பிரார்த்தனையை மேற்கொண்டனர் எனவும் அவர் கூறினார்.
ஆலயத் திருப்பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்ததற்கும், கும்பாபிஷேக பணிகள் சீராக நடைபெறுவதற்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்ட சுப்பிரமணியம், தொடர்ந்து ஆதரவை ஆலயத்திற்கு வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில், அறிவியல் தொழில்நுட்ப அமைச்சரும் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாண்புமிகு சங் லி காங், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமாகிய மாண்புமிகு அ. சிவநேசன், ஆலய சட்ட ஆலோசகர் டத்தோ ஆனந்தன் தட்சிணாமூர்த்தி, டத்தோ சுபாஸ்கரன் ஆகியோர் கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு வருகைப் புரிந்தனர்.
பட விளக்கம் :
1) பீடோர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பொறுப்பாளர்கள், கும்பாபிஷேகத்தை வழிநடத்திய குருக்கள்களுடன் ஆலய தலைவர் சுப்பிரமணியம்
2) கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு வருகைப் புரிந்த அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் சங் லி காங், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ. சிவநேசன், ஆலய சட்ட ஆலோசகர் டத்தோ ஆனந்தன் தட்சிணாமூர்த்தி, டத்தோ சுபாஸ்கரன் ஆகியோருடன் ஆலய செயலாளர் ச. சத்திஸ்
3) பக்தர்களில் ஒரு பகுதியினர்