3 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை தொட்ட முதல் நிறுவனம்: ஆப்பிளின் அசுர வளர்ச்சி

பிரபல ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் நேற்று உச்சத்தை அடைந்து, 3 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட்டிருக்கிறது.

இதுவரை சந்தை மதிப்பீட்டின்படி இந்த எல்லையை எந்த நிறுவனமும் அடைந்ததில்லை.

இதனால் இந்த சந்தை மதிப்பை தொட்ட உலகின் முதல் நிறுவனமாக மாறி, இதன் மூலம் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாகவும் ஆப்பிள் உயர்ந்திருக்கிறது.

நாஸ்டாக் (Nasdaq) எனப்படும் அமெரிக்க பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் ஒரு பங்கு 193.97 அமெரிக்க டாலர் என்ற அளவில் முடிவடைந்ததன் மூலம், அதன் சந்தை மதிப்பு 3.05 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட முடிந்தது.

சற்று மந்தமடைந்திருந்த தொழில்நுட்பத் துறையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பரந்த எழுச்சியினால் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை நன்றாக பயனடைந்திருக்கிறது. மேலும் ஐபோனின் சுறுசுறுப்பான விற்பனையாலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட போகும் “ஆப்பிள் விஷன் ப்ரோ” என்கிற கலப்பு-ரியாலிட்டி ஹெட்செட் மீதான மக்களின் உற்சாகம் ஆகியவற்றினாலும் இந்நிறுவன பங்குகள் கூடுதல் பயன் அடைந்திருப்பதாக பங்குசந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

3 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பீட்டை தொட்ட முதல் நிறுவனம் என்பது மட்டுமல்லாமல், 2018-ம் வருடம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அடைந்ததும், அதன்பின் 2020-ல் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை தொட்டதும், ஆப்பிள் ஏற்கெனவே எட்டிய மைல் கற்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆப்பிள் பங்குதாரர்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கின்றனர். சந்தை மதிப்பில் 6 நிறுவனங்கள் மட்டுமே டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அடைந்துள்ளது. அவற்றில் 5 நிறுவனங்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து மைக்ரோசாப்ட் (2.5 டிரில்லியன்), சவுதி அராம்கோ (2 டிரில்லியன்), அல்பாபெட் (1.5 டிரில்ல்லியன்), அமேசான் (1.3 டிரில்லியன்) மற்றும் என்விடியா (1 டிரில்லியன்) ஆகியவை மற்ற 5 நிறுவனங்கள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here