கோலாலம்பூர், ஆகஸ்ட் 3:
பெரிக்கத்தான் நேஷனல் தனது கூட்டணிக்குள் இரு புதிய இந்தியக் கட்சிகளை சேர்த்துக்கொண்டுள்ளது.
சிறுபான்மையினர் உரிமைகள் செயல் கட்சி, தேசிய இந்திய முஸ்லிம் கூட்டணிக் கட்சி ஆகிய மலேசிய இந்திய சமூகத்தின் குரலாக விளங்கும் கட்சிகளே அவையாகும்.
கூட்டணியில் அவ்விரு கட்சிகளும் சேர்க்கப்படுவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுதீன் தெரிவித்தார்.
“இந்தியர்களுக்கான ஆகப்பெரிய கட்சியாக உள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி திகழுகிறது. ஆனால், நாட்டில் பதிவு செய்யப்பட்ட பல கட்சிகள் உள்ளன.
“பெரிக்காத்தான் நேஷனலின்கீழ் இந்திய சமூகக் குழுவுக்காக குழு ஒன்றை நாங்கள் அமைத்துள்ளோம்.
“அக்குழுவுக்கு நான் தலைமை தாங்குகிறேன். துணைத் தலைவர், செயலாளர், மற்றவர்கள் அனைவரும் இந்தியர்கள். இந்திய சமூகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து அவர்கள் கலந்தாலோசிப்பர்,” என்று செய்தியாளர்களிடம் ஹம்ஸா கூறினார்.
“அண்மையில் நான் நடத்திய சந்திப்பு ஒன்றில் 30க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். சந்திப்பு குறித்து அறிந்தவுடன் மேலும் பலர் கலந்துகொள்ள விரும்பினர்.
“இன்னும் ஓரிரு நாளில் மற்றொரு சந்திப்பை நான் நடத்துவேன். அதில் கலந்துகொள்ள இதுவரை 50க்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
“இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் கட்சித் தலைவர்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகளிடமிருந்து கருத்துகள் பெறுவோம்,” என்று ஹம்ஸா கூறினார்.