லெம்பா ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அல்டிமேட் எனப்படும் சைட் அமாட் சைட்அப்துல் ரஹ்மானை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தொகுதி வாக் காளர்களைக் கேட்டுக் கொண்டார்.
பிரபல இசை கலைஞரான அல்டிமேட் தொகுதி மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வருகின்ற நிலையில் அவர் வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது என்று பிகேஆர் தேசியத் தகவல் பிரிவுத் துணைத் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
இவர் இத்தொகுதியில் ஒரு வேட்பாளராகப் புதிதாக உதித்து விடவில்லை. மாறாக கடந்த 9 மாதங்களாகத் தொகுதி மக்களுக்கு அவர் சேவையாற்றி வருகிறார். பல்வேறு முயற்சிகளை அவர் முன்னெடுத்திருக்கிறார்.
தொகுதி மக்களின் பிரச்சினைகளை முழுமையாகக் கேட்டறிந்திருக்கிறார். தீர்க்கப் படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அவர் உறுதி அளித்திருக்கிறார். அரசியல் நடத்துவது மட்டும் போதாது. மாறாக மக்கள் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பது அவரின் போக்கு தொகுதி வாக்காளர்களை வெகு வாகவே கவர்ந்துள்ளது என்று டத்தோ ரமணன் கூறினார்.
சனிக்கிழமை நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் லெம்பா ஜெயா மக்கள் குறிப்பாக வாக்காளர்கள் கலைஞர் அல்டிமேட்டிற்கு அமோக ஆதரவு வழங்குவர் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். லெம்பா ஜெயா சட்டமன்றத் தொகுதியில் பெரிக் காத்தான் நேஷனல் வேட்பாளர் ஷரிஃபா ஹஸ்லிஸா, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அல்டிமேட் ஆகியோரிடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.