சிங்கப்பூர், ஆகஸ்டு 16:
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் 55 வயது ஆடவர் ஒருவர், விமானம் ஏறுவதற்கான அனுமதி அட்டையைப் பெற்றுவிட்டு, விமானத்தில் ஏறாமல் இருந்ததற்காக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
குறித்த கைது தொடர்பில், காவல்துறை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
அந்த ஆடவர் சிங்கப்பூரிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் தனது காதலியை வழியனுப்புவதற்காக, இடைவழிப்பகுதிக்குள் நுழைய அனுமதி அட்டையைப் பெற்றிருக்கலாம் எனக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காகக் காவல்துறை அவரைக் கைது செய்தது.
அந்தச் சட்டத்தின்படி, விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டையை பெற்றுக்கொண்டு விமானத்தில் ஏறாமல் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவது ஒரு குற்றமாக அதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விஷயம் தொடபில் காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சாங்கி விமான நிலையத்தின் இடைவழிப்பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி எனவும் சிங்கப்பூரிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்வோர் மட்டுமே அதைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் எனவும், காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.
இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $20,000 வரை அபராதமும் அல்லது இரண்டில் ஒன்று விதிக்கப்படலாம்.