புத்ராஜெயா, ஆகஸ்ட்டு 20:
சுதந்திர தினச் சின்னம், கருப்பொருள் ஆகியவை தொடர்பான விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று துணைப் பிரதமர் டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி செய்யும் நான்கு மாநிலங்கள் வேறு சுதந்திர தினச் சின்னம், கருப்பொருளைப் பயன்படுத்தும் என்று அதன் இளைஞரணித் தலைவர், அகமட் ஃபட்லி ஷாரி கூறியிருப்பது நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு முரணானது என்று துணைப் பிரதமர் கூறினார்.
“இது அரசியல் தொடர்பானதல்ல. இது நாட்டின் கொடி, சுதந்திர தினக் கொண்டாட்டத்தைப் பற்றியது. இதை அரசியலாக்கக்கூடாது,” என்றார் டாக்டர் ஸாஹிட்.
பெர்லிஸ், கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களைப் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி செய்கிறது குறிப்பிடத்தக்கது.