நடிகை திவ்யா ஸ்பந்தனா பற்றி சமூக வலைதளங்களில் தவறான செய்தி

தமிழில் வெங்கடேஷ் இயக்கத்தில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா. அர்ஜுனுடன் கிரி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

‘சான்டல்வுட் குயின்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி உள்ளார்.

தற்போது 40 வயதான நடிகை திவ்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக செய்தி பரவி வந்தது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியும், கொந்தளிப்பும் ஏற்படுத்தியது.

இணையத்தில் பலரும் இந்த தகவலை உறுதிப்படுத்தாமல் ஷேர் செய்த நிலையில், நலமுடன் இருப்பதாக நடிகை திவ்யா ஸ்பந்தனா விளக்கம் அளித்துள்ளார். தற்போது ஜெனீவாவில் நலமுடன் இருக்கிறேன் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் சித்ரா சுப்ரமணியம் என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் திவ்யா ஸ்பந்தனாவின் மறைவு வதந்தி என்பதை உறுதி செய்திருக்கிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டிருந்த அவர்” திவ்யா ஸ்பந்தனாவிடம் தற்போது பேசினேன். அவர் நலமாகதான் உள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற அவருடனான சந்திப்பு அற்புதமானது.

பெங்களூர் மீதான காதல் உட்பட பல விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்”என்று குறிப்பிட்டிருக்கிறார். நடிகை திவ்யா நலமுடன் இருக்கிறார் என்ற தகவல் வந்ததும் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here