புத்ராஜெயா:
மலேசிய குற்ற கண்காணிப்பு பணிக்குழுவின் (MyWatch) முன்னாள் தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவன் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 16 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய கோரி காவல்துறை மற்றும் அரசு செய்த மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது.
இணையம் வாயிலாக இன்று வெள்ளிக்கிழமை (செப். 15) நடந்த இந்த வழக்கில் நீதிபதிகள் டத்தோ எஸ். நந்தா பாலன், டத்தோ சீ மீ சுன் மற்றும் டத்தோ அசிமா உமர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு இந்த முடிவை ஒருமனதாக எடுத்தது.
நீதிபதி அசிமா, தீர்ப்பை வாசிக்கும் போது, Poca தொடர்பான வேறு ஒரு வழக்கில் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஸ்ரீ சஞ்சீவனின் வழக்கை உயர்நீதிமன்றம் அனுமதித்ததில் தவறிழைத்துள்ளது என்றார்.
மேலும் “கடந்த ஆண்டு கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை தற்போதைய வழக்கில் பயன்படுத்த முடியாது, ஏனெனில் உச்ச நீதிமன்றம் Poca இன் பிரிவு 4 ஐ அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்ததற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் காவலில் வைக்கப்பட்டதால், அச்சட்டம் இவ்வழக்கில் பின்னோக்கிப் பொருந்தாது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
மேலும் வழக்கு செலவாக ஸ்ரீ சஞ்சீவன் RM60,000 செலுத்தவும் உத்தரவிட்டார்.