ஹாங்ஜோ:
இவ்வாண்டின் ஆசிய விளையாட்டுகளில் இந்தியா அதன் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
ஆண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் குழுப் போட்டியில் ருத்ராங்ஷ் பாட்டில், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமார், திவ்யான்ஷ் சிங் பன்வார் ஆகியோரைக் கொண்ட இந்தியக் குழு தங்கத்தைக் கைப்பற்றியது. மேலும், இக்குழு புதிய உலகச் சாதனையையும் படைத்துள்ளது.
அதாவது சீனாவின் ஆண்கள் குழு சென்ற மாதம் படைத்த உலகச் சாதனையை இந்தியா முறியடித்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் ஐஷ்வரி பிரதாப் சிங் தோமார் பதக்கம் வென்றார். அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அவருடன் தீவிரமாகப் போட்டியிட்ட சக இந்தியரான ருத்ராங்ஷ் நான்காவதாக வந்தார்.
ஆண்கள் 5 மீட்டர் ‘ரேப்பிட்-ஃபயர்’ துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் அதார்ஷ் சிங், அனீஷ் பான்வாலா, விஜய்வீர் சித்து ஆகியோரைக் கொண்ட குழு 1718 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. 1765 புள்ளிகளைப் பெற்று சீனா தங்கம் வென்றது. 1734 புள்ளிகளை எடுத்த தென்கொரியா வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
இரண்டே நாள்களில் ஐந்து பதக்கங்களைக் குவித்துள்ளனர் இந்திய வீரர்கள்.