மனிதவள அமைச்சர் வ.சிவகுமாருக்கு மக்கள் சேவகன் விருது-மலாக்கா தமிழர் சங்கம்

ஆயோர் குரோ:

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமின்றி மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் மனிதவள அமைச்சர் மாண்புமிகு வ.சிவகுமார் அவர்களுக்கு நேற்று 7.10.2023 இல் மலாக்காவில் தாய்ச் சங்கமாக இருந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மலாக்கா தமிழர் சங்கம்
மக்கள் சேவகன் எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

மலாக்கா தமிழர் சங்கத்தின் சொந்தக் கட்டடத்தின் மண்டபத்தில் தமிழவேள் கோ.சாரங்கபாணி கூட்ட அறையில் மனிதவள அமைச்சருடன் ஒரு பொன்மாலைப் பொழுது சந்திப்பு நிகழ்ச்சியில் இவ்விருதினை மலாக்கா தமிழர் சங்கத் தலைவர் திரு.சு.குணசேகரன் அமைச்சருக்குச் சால்வையையும் மக்கள் சேவகன் பதக்கத்தையும் அணிவித்துச் சான்றிதழையும் அன்பளிப்புச் செய்தார்.

சுமார் 50 தமிழர் சங்க உறுப்பினர்களும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அமைச்சர் சிவகுமார், நாட்டின் தொழிலாளர் திறன் பயிற்சி, மனிதவள அமைச்சின் வேலை வாய்ப்புகள், சொக்சோவின் வழி உள்ள பயன்கள், தமிழ்ப்பள்ளிக்களுக்கு வழங்கப்படும் அரசாங்க உதவிகள், திவேட் பயிற்சித் திட்டங்கள், மித்ராவின் தற்போதைய செயல்முறைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் மீராகுமார், மனித வள அமைச்சின் சொக்சோ அதிகாரி மகேசன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here