கோலாலம்பூர்:
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள நாளை அக்டோபர் 10ஆம் தேதி முதல் முறையாக விண்ணப்பம் செய்யும் படி மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் முடிதிருத்தும் கடைகள், நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் வேலை செய்ய 7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் அந்நிய தொழிலாளர் இல்லாததால் பெரும் பாதிப்பை எதிர் நோக்கி வந்தனர்.
இந்நிலையில் நாளை அக்டோபர் 10ஆம் தேதி முதல் அந்நிய தொழிலாளர்களை தருவித்துக் கொள்ள முறையான ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யுங்கள். அரசாங்கம் வழங்கி இருக்கும் இந்த அருமையான வாய்ப்பை முறையாக பயன் படுத்தி கொள்ளுங்கள் என்று இந்திய பாரம்பரிய தொழில் துறைகளை மனித வள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் மீண்டும் செயல்பட வாய்ப்பு வழங்கிய பிரதமருக்கு இந்த வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.






















