கோலாலம்பூர்:
2023 அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கருத்தரங்கு ஆற்றல்மிக்க தொழிலாளர்களை உருவாக்கும் ஒரு களமாக விளங்கும் என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார். இந்த அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கருத்தரங்கு கேஎல்சிசி எனப்படும் கோலாலம்பூர் கான்வென்ஷன் சென்டரில் அக்டோபர் 11 தொடங்கி 13 வரை நடைபெறுகிறது. தொழிலாளர்கள் மேலும் வேலை தேடுபவர்களுக்கு இந்த மாநாடு அளப்பரிய பங்கினை ஆற்றும்.
மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் பெர்கேசோ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி திறன்மிக்க பணியாளர்களை உருவாக்கும் மடானி அரசாங்கத்தின் அணுகு முறையைப் பின்பற்றுவதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த மூன்று நாட்களும் ஆற்றல்மிக்க தொழிலாளர் பலத்தை வடிவமைப்பதில் முக்கிய மைல்கல்லாக இந்தக் கருத்தரங்கு விளங்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாக அவர் குறிப்பிட்டார். இந்தக் கருத்தரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர். பெல்ஜியம், இந்தோனேசியா, அயர்லாந்து, தென் கொரியா, துருக்கி, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து 28 அனைத்துலக தொழில் நிபுணர்கள் இந்தக் கருத்தரங்கை வழிநடத்துவர்.
நாட்டின் தொழில், பொருளாதார வளர் ச்சியை மேம்படு த்தும் வகையில் இந்தக் கருத்தரங்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றி ணைந்து செயல்படுவதன் மூலம் சவால்களைச் சமாளிக்கவும் தேசிய இலக்குகளை அடையவும் சிவில் மலேசியா அணுகுமுறை அளப்பரிய பங்கினை வழங்கும் என்று சிவகுமார் கூறினார். இக்கருத்தரங்கில் அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டுள்ளனர். உள்நாட்டு, அனைத்துலகப் பேச்சாளர்கள் மிகச்சிறந்த மனிதவளத்தை உருவாக்கும் ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மனிதவள துணை அமைச்சர் முஸ்தபா சக்முட், பெர்கேசோ தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், பெர்கேசோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஸிஸ் முகமட், பெர்கேசோ துணைத் தலைமைச் செயல் அதிகாரி ஜோன் ரிபா மரின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.