திருவனந்தபுரம்:
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் போலவே அச்சு அசலாக தோற்றமளிக்கக் கூடிய கேரளா டீ கடை ஓனர்தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போல வேஷமிடுபவர்கள் எங்கும் உண்டு.
தமிழ்நாட்டில் தேர்தல், அரசியல் கட்சிகளின் மாநாடுகளில் இதை பார்க்க முடியும். தலைவர்களின் பிறந்த நாள் கூட்டங்களில் அந்த தலைவர்களைப் போல வேடமிடும் நபர்களை சுற்றி மக்கள் கூட்டம் மொய்க்கும்.
இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஒரே மனிதரைப் போல 7 பேர் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையும் உண்டு. ஆனால் அப்படியான விசித்திரங்கள் அரிதிலும் அரிதாகத்தான் நடந்திருக்கிறது. இப்போது சமூக வலைதளங்கள் அப்படி ஒரு அரிதான மனிதர் குறித்துதான் பேசுகிறது
கேரளாவை சேர்ந்த டீ கடையை நடத்துகிற நபர்.. கால் சட்டை அணிந்தபடி, தலையில் கொட்டாமல் இருக்கும் சில முடிகளை கோதியபடி, நரைத்த தாடியை வருடியபடி நிற்கும் மனிதர்தான் கேரளாவின் திடீர் விஐபி. அப்புறம் என்னங்க.. பார்ப்பதற்கு அச்சு அசலாகவே நடிகர் ரஜினிகாந்த் நம் முன்பு நிற்பதாகவே நினைத்து கிள்ளிப் பார்க்க வைக்கிறார் இந்த சுதாகர் பிரபு.
கொச்சி கோட்டையில் பட்டாளம் சாலையில் டீ கடை நடத்தி வருகிறார் சுதாகர் பிரபு. ஒரு நிமிடம் இவரை பார்த்தாலே அடடே! ரஜினிசார் என சொல்லாதவர் எவரும் இருக்க முடியாது. அப்படித்தான் தோற்றம் அளிக்கிறார் சுதாகர் பிரபு.
இந்த ரஜினி ‘அவதாரம்’ குறித்து சுதாகர் பிரபு கூறுகையில், 23 ஆண்டுகளாக டீ கடைதான் தொழில். எனக்கு சமையல்தான் ரொம்ப பிடிக்கும். கேரளாவுக்கு சுற்றுலா பயணிகளாக வரும் ஜப்பான் நாட்டவர் என்னுடன் நின்று போட்டோ எடுப்பதில் விரும்புவர். நடிகர் ஜெய்ராம் உள்ளிட்டோரும் போட்டோ எடுத்துள்ளனர்.
இந்த அதிசய பிறவி ரஜினியை வெளி உலககுக்கு கொண்டு வந்தவர் இயக்குநர் நாதிர்ஷா. அண்மையில் கொச்சி கோட்டை அருகே படப்பிடிப்பு நடத்தி கொண் டிருந்தார். அப்போது திடீரென அங்கிருந்தவர்கள், ரஜினி சார் வந்துவிட்டார் என சொல்ல எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி. பின்னர்தான் வந்தது ரஜினி சார் அல்ல.. டீ கடை ஓனர் சுதாகர் பிரபு என்பது. உடனே சுதாகர் பிரபுவை போட்டோ எடுத்து ஃபேஸ் புக்கில் பதிவிட்டார் நாதிர்ஷா. அப்புறம் என்ன இப்போது சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டாராக பேசு பொருளாகிவிட்டார் சுதாகர் பிரபு.