டாக்கா: வங்காளதேசத்தில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் 15 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வங்காளதேசத்தில் தண்டவாள பராமரிப்பு முறையாக இல்லாதது, சிக்னல்கள் பிரச்சினை உள்ளிட்டவற்றால் ரயில் விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. அந்த வகையில், வங்காளதேசத்தில் இன்று இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. வங்காளதேசத்தின் தலைநகரத்தில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு நகரமான பைரப் நகரில் இந்த விபத்து நேரிட்டது.
பயணிகள் ரயில் வந்த அதே தண்டவாளத்தில் சரக்கு ரயிலும் வந்ததால் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தலைக்குப்புற கவிழ்ந்தன. இந்த கோர விபத்தில் ரயிலுக்குள் இருந்த பயணிகள் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.