கோத்தா கினாபாலு:
3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 50.25 கிலோ எடையுடைய சியாபு வைத்திருந்த குற்றச்சாட்டில் அனைத்துலக போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் சகோதரர்களாவர்.
27 முதல் 38 வயதுடைய உள்ளூர்வாசிகளான மூன்று சந்தேக நபர்களும், செப்டம்பர் 7 ஆம் தேதி மதியம் 12.40 மணியளவில், கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தில் (KKIA) வருகை மண்டபம் வழியாக வந்தபோது அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், காரில் வந்த மூவரையும், மாநில போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் போலீசார் தடுத்து நிறுத்தியதாக சபா போலீஸ் கமிஷனர் டத்தோ ஜௌதே டிகுன் தெரிவித்தார்.
“சந்தேக நபர்களில் ஒருவர் காவல்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றார், ஆனாலும் காவல்துறையினர் லாவகமாக செயற்பட்டு அவரை கைது செய்தனர்.
அவர்களின் காரை சோதனை செய்தபோது, சந்தேகத்திற்கிடமான மெத்தம்பேட்டமைன் அல்லது சியாபு கொண்ட 50 பொட்டலங்களை பின்பக்க பயணிகள் இருக்கையின் பின்புறத்தில் மறைத்து வைத்திருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டது ” என்று அவர் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 11) கெபாயானில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.