லண்டன்:
மத்திய கிழக்கில் எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையில் இருக்கும் ராஃபா எல்லை இன்று புதன்கிழமை திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
காஸாவில் சிக்கிக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் நாட்டவர்களுக்கு அந்த நாட்டின் குழுக்கள் ஏற்கெனவே உதவி வருகின்றன.
பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில் மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குள் உடனடியாகப் போக வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்து உள்ள 88 பாலஸ்தீனர்களும் சுமார் 500 வெளிநாட்டினரும் அந்த எல்லை வழியாக வெளியேறுவார்கள் என்று புதன்கிழமை எதிர்பார்க்கப்பட்டது.
எகிப்தில் இருந்து காஸாவுக்குள் புதன்கிழமை காலை நேரத்தில் மருத்துவ வாகனங்கள் நுழைந்தன.
எல்லையில் உள்ள கதவு பகுதியில் பலரும் கூடி இருந்தனர்.
காஸாவில் கைப்பேசி, இணையச் சேவைகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டு உள்ளன.
காஸாவில் நடக்கும் தரை மோதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் அறிவித்தது. அக்டோபர் 7 முதல் 326 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகிவிட்டனர்.
இஸ்ரேலுக்குள் புகுந்து ஹாமாஸ் தாக்கியதைத் தொடர்ந்து காஸாவில் 11,000க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்கி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.