புது தம்பதியரா? திருமணத்திற்கு தயாராகிக்கொண்டிருப்பவரா?

-இந்தியாவின் மகப்பேற்று சிறப்பு மருத்துவர்

திருமணமாகி மூன்று வருடம் ஆகியும் கருத்தரிக்க சிரமப்படுவதால் fitness உடற் பயிற்சிகள் செய்வதற்காக என்னிடம் 27 வயதுடைய பெண் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பேசுகையில் அவரின் உடல் எடை, தைராய்டு பிரச்னை, வாழ்வியல் நடை முறைகளில் மாற்றம் என பல சிக்கல்களுக்கு உள்ளாகி இருந்தார். எனவே, அதற்கான பாதிப்புகளை எடுத்துரைத்து உடற்பயிற்சி திட்டங்களையும் வழங்கினேன். இவ் வாறான சிறிய பிரச்னைகளை சமீபத்தில் நிறைய தம்பதியரிடம் பார்க்க முடி கிறது. ஆகவே, வாழ்வியல், உடல் எடை போன்ற பிரச்னைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வும், உடற்பயிற்சிகள் ஏன் செய்ய வேண்டும் என்பதனை எடுத்துரைக்கவுமே இந்தக் கட்டுரை.

கருமுட்டையும் விந்தணுவும்…

* ஒரு விந்தணு முழுமையாக உற்பத்தியாக 70 முதல் 75 நாட்கள் தேவைப்படுகிறது.

* ஒரு கருமுட்டை முழுமையாக முதிர்ச்சி பெற குறைந்தது மூன்று மாத காலம் ஆகும்.

* கருமுட்டையிலும், விந்தணுவிலும்தான் நம் மரபணு மூலக்கூறுகள் உள்ளது. இவை இரண்டும் உற்பத்தியாகி உருவாவது முதல் வெளிவருவது வரை ஆரோக்கியமாக பேணிக்காப்பது அவசியம்.

* மேலும் பெண்களுக்கு தன் கருமுட்டைகள் அம்மாவின் கருவில் இருக்கும் போதே உற்பத்தியாகிவிடும். பூப்படைந்ததும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு முட்டையாக முழுமையாக வளர்ந்து வெளியேரும் என்பதால் பெண்கள் எப்போதும் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம்.

* இந்த இனவிருத்தி செல்களான(Cell) விந்தணுவும், கருமுட்டையும் உற்பத்தியாக, சரியாக அதன் வேலையை செய்ய டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜஸ்ட்ரோன் போன்ற ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியம்.

கவனிக்க வேண்டிய உடல்நலப் பிரச்னைகள்

திருமணம் என்றதும் புது ஆடைகள், நகைகள், பத்திரிகை என மற்றவற்றில்தான் நாம் கவனம் செலுத்துகிறோமே தவிர இருவரின் உடல் நலனில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன, அதனை எப்படி சரி செய்வது என்று யோசிப்பதில்லை. அதனால் உடல் எடை அதிகமாக இருப்பது, குறைவாக இருப்பது, தைராய்டு சுரப்பதில் பிரச்னை, பி.சி.ஓ.டி., மாதவிடாயில் ஏதேனும் சிக்கல் இருப்பது, ஹார்மோன்களின் சமநிலை மாறி இருப்பது, வேறு ஏதாவது தொற்றுநோய் இருக்கிறதா என்று உறுதி செய்வது என அனைத்துவித பிரச்னைகளையும் முன்னரே ஆராய்ந்து அதற்கான தீர்வு காண்பது மிக அவசியம் ஆகும். ஏனெனில், இவை அனைத்தும் கருத்தரிப்பதில் இடையூறுகளை விளைவிக்கும்.

இயன்முறை மருத்துவம்

புதுமண தம்பதியர் திருமணத்திற்கு முன்பே ஒன்றாக அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனைகளையும், உடற்பயிற்சி திட்டங்களையும் பெற்றுக்கொள்ளுதல் அவசியம். மேலும் அவர்கள் பரிந்துரைத்து கற்றுக்கொடுக்கும் உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். இதனை திருமணத்திற்கு பின்பும் கடைப் பிடித்தால் முழு பலனும் கிடைக்கும். ஏனெனில், நல்ல மரபணு உடைய இனவிருத்தி செல்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்துவது அவசியம்.

1. உடற்பயிற்சி வகைகள்

ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்யவேண்டிய சாதாரண தசை வலிமை பயிற்சிகள் (Strengthening Exercises), தசை தளர்வு பயிற்சிகள் (Stretching Exercises), இதய நுரையீரல் தாங்கும் திறன் பயிற்சிகள் (Endurance Exercises) என அனைத்தையும் இயன்முறை மருத்துவர் ஒவ்வொரு நபருக்கு ஏற்ப பரிந்துரைத்து கற்றுக்கொடுப்பார். இதுவே ஆரோக்கியமான இனவிருத்தி செல்கள் உற்பத்தியாக போதுமானதாகும்.

அதேபோல பி.சி.ஓ.டி., தைராய்டு போன்ற வேறு பிரச்னைகள் இருப்பவர்களுக்கு அதற்கேற்ப ‘பிரத்யேக உடற்பயிற்சி திட்டத்தை’ பரிந்துரைத்து கற்றுக்கொடுப்பர். உடல் எடை குறைவதற்கு, கூடுவதற்கு என அதற்கான பயிற்சிகளையும், தீர்வு களையும் வழங்குவர்.

2. பயன்கள்…

* தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் நம் உடல் மற்றும் மனம் சீராய் இயங்க ஆரம்பிக்கும். இதனால் நம் உடலில் சுரக்கும் ரசாயனங்களின் உற்பத்தி சீராக இருக்கும்.

* மாதவிடாய் சுழற்சி சீராக அமையும்.

* ஆண்களுக்கும் விந்தணு உற்பத்தியாக தேவைப்படும் ஹார்மோன்கள் அளவு சீராய் இருக்கும்.

* கருமுட்டை மற்றும் விந்தணு வளர்ச்சியும், முதிர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். அதாவது, முழு வளர்ச்சி இல்லாமல் உற்பத்தியாகும்போது செல்கள் இணைந்தால் பின் கருக்கலைவு நிகழலாம் என்பதால் இரு செல்களின் தரமும் முக்கியமானது.

3. மற்ற விஷயங்கள்

* தினமும் 8 மணி நேர உறக்கம் அவசியம். அதிலும் குறிப்பாக, இரவு தாமதமாக உறங்கி காலை தாமதமாக எழுவதை தவிர்த்துவிட்டு, இயற்கையோடு ஒன்றிணைந்து செயல்படுவது சிறந்தது. அதேநேரம், இரவு நேர வேலையை (Night Shift) தவிர்ப்பதும் நல்லது.

* வீகன், பேலியோ என வெவ்வேறு வித உணவு முறைகளை (Diets) கடைப்பிடிப்பதை தவிர்த்து சரிவிகித உணவு (balanced diet) முறையினை பின்பற்றுதலே சிறந்ததாகும்.

* மனஅழுத்தம், படபடப்பு, மனச் சோர்வு இருப்பின் அதனை எவ்வாறு கையாள்வது என முறையாக உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

* தினமும் குறைந்தது இருபது நிமிடங்கள் வெயிலில் இருப்பது அவசியம்.

* அதேபோல, தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் குடிநீர் அருந்துவது முக்கியம். அதனை மொத்தமாக அரை லிட்டர், ஒரு லிட்டர் எனக் குடிக்காமல் அவ்வப்போது சிறிய அளவில் பலமுறை அருந்துவது நல்லது.

* சூரிய உதயம் தொடங்கி சூரியன் மறைவு நேரம் வரை மட்டுமே உண்பதை பழக் கமாக்கிக் கொள்வது நன்று. அதாவது, இரவு உணவை மாலை ஆறு மணிக்குள் முடித்துவிட வேண்டும்.

* விருந்து, ஹோட்டல் என வெளி இடங்களில் உண்ணும்போது அளவோடு ஜங்க் உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது.

* காய்கறிகள், பழங்கள், புரதம், நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம்.

மொத்தத்தில், வலுவான ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை நன்முறையில் உரு வாக்குவதில் தினசரி வாழ்வியல் மாற்றங்களையும், உடற்பயிற்சிகளையும் சரிவர செய்து வந்தாலே போதுமானதாகும் என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவது மிக அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here