வாஷிங்டன்:
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் தொடர்பில் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்கும் இடையே உடன்பாட்டை எட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சனிக்கிழமை இரவு அவர் கூறினார். உடன்பாடு இன்னும் எட்டப்படாததை வேறொரு அமெரிக்க அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.
ஐந்து நாள் போர்நிறுத்தத்திற்குக் கைமாறாக, காஸாவில் பிணை பிடிக்கப்பட்டுள்ள டஸன் கணக்கான மாதர்களையும் சிறார்களையும் விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேல்-அமெரிக்கா-ஹமாஸ் தரப்புகளுக்கு இடையே தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்தோரை மேற்கோள்காட்டி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
ஆறு பக்க விவரங்கள் அடங்கிய அந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக, அனைத்துத் தரப்புகளும் குறைந்தது ஐந்து நாள்களுக்கு சண்டையை நிறுத்திக்கொள்வர் என்றும் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை 50 அல்லது அதற்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் சிறு குழுக்களாக விடுவிடுக்கப்படுவர் என்றும் வாஷிங்டன் போஸ்ட் கூறியிருந்தது.
பிணைக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை அடுத்த சில நாள்களில் தொடங்கக்கூடும் என்று இந்த உடன்பாடு குறித்து விவரம் அறிந்தோர் தரப்பு கூறியது.