புத்ரா ஜெயா:
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வரை நிலவரப்படி, வேலை வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு கைவிடப்பட்ட மொத்தம் 1,058 வெளிநாட்டு ஊழியர்கள் புதிய முதலாளிகளின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்த தொழிலாளர்கள் குடிநுழைவுத் துறை மற்றும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுத்து மீட்கப்பட்டனர் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு சட்டம் 1955 மற்றும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச வீட்டுவசதி மற்றும் வசதிகள் சட்டம் 1990 (சட்டம் 446) ஆகியவற்றின் கீழ், தொழிலாளர்களை கைவிட்ட தவறான முதலாளிகளுக்கு எதிராகவும் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்துல தொழிலாளர் அமைப்பால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி, தொழிலாளர்கள் மனித கடத்தல் அல்லது கட்டாய உழைப்புக்கு பலியாகாமல் இருப்பதை உறுதிசெய்ய மீட்பு நடவடிக்கை முக்கியமானது என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இரண்டு துறைகள் உட்பட அனைத்து துணைத் துறைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் விண்ணப்பங்களுக்கான ஒதுக்கீடு மறுஆய்வு செய்யப்படும் என்றும், மனிதவள அமைச்சு அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, தேவையான செயல்பாடுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று அறிவித்துள்ளது.
























