புக்கிட் காயு ஈத்தாம்:
மலேசியா- தாய்லாந்து எல்லையில் சோதனைச் சாவடிகளை இணைக்கும் சாலை சீரமைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை தொடர்பில் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
புக்கிட் காயு ஈத்தாம் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடி (ICQS) மற்றும் சடாவோ சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) வளாகத்தை இணைக்கும் திட்டம், வேகமான மற்றும் வசதியான போக்குவரத்தை உறுதி செய்வதில் முக்கியமானது என்று பிரதமர் கூறினார்.
“சீரமைப்பு திட்டம் தாமதமாகி வருகிறது, ஆனால் இது உடனடியாக செய்யப்பட வேண்டும். ஏனெனில் இவை இராணுவப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது என்றும், அதனால் இரண்டு வாரங்களுக்குள் நாங்கள் இந்த விஷயத்தை தீர்க்க ஒரு இறுதி முடிவை எடுப்போம்,” என்று அவர் நேற்று புக்கிட் காயு ஈத்தாம் ICQS வளாகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் கூறினார்.