ஜப்பான் நாட்டு அமைச்சரவையில் உள்ள 4 அமைச்சர்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டு அமைச்சரவையில் திடீர் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. நிதி சேகரிப்பின்போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் அதில் சம்பந்தப்பட்ட நான்கு அமைச்சர்கள் திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்று, அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் ஜப்பானிய ஆளும் கட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 2022 வரை 5 ஆண்டுகளாக சுமார் 500 மில்லியன் யென் கணக்குகளில் இவர்கள் வைப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அமைச்சர்களின் மோசடியை அடுத்து பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அரசாங்கத்தின் செல்வாக்கு அந்த நாட்டில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.




















