அம்பாங்:
குடிபோதையில், ஒழுங்கீனமாக நடந்ததற்காகவும், போலீசாரிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதற்காகவும் 39 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாக்கெட் கத்தியை எடுத்து, அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் உள்ள போலீசாரை மிரட்டினார். இச்சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (டிசம்பர் 12) இரவு 8.10 மணியளவில் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா OCPD துணை ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
“காவல்துறையினர் அவரை பலமுறை எச்சரித்தும் அந்த நபர் ஒரு கத்தியை எடுத்து காட்டி, ஆக்ரோஷமாக நடந்துகொண்டார் ” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைவிலங்கிடப்பட்ட நிலையில் சந்தேக நபர் தனது தலையை வீதியில் பலமுறை மோதியதால் அவரது நெற்றியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“சந்தேக நபர் பயன்படுத்திய கத்தியையும் நாங்கள் கைப்பற்றினோம், மேலும் குறித்த நபருக்கு 5 முந்தைய குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும், அவர் டிசம்பர் 19 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்றும் ஏசிபி முகமட் ஆசாம் கூறினார்.