ஸ்ரீ இஸ்கண்டார் :
ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனையின் கட்டுமான இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் இந்த சம்பவம் குறித்த தகவல்களைப் பெற்றதாக தென் பேராக் காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் ஹபேசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்தார்.
இறந்து கிடந்த அடையாளம் தெரியாத குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்ததாகவும், அது புதிதாக பிறந்த குழந்தை என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
“குழந்தையின் உடல் பரிசோதனையில் அதற்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இன்று காலை மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, ராஜா பெர்மெய்சுரி பைனூன் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் வல்லுநர்கள் பிரேத பரிசோதனை மேற்கொள்வார்கள் ” என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 318 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும்,இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் முஹமட் சுல்கர்னாயின் ஜுசோவை 013-9740294 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.