கோத்தா கினாபாலு:
சபாவின் கிழக்குக் கடற்கரையிலுள்ள பெலூரான் மாவட்டத்தில் தெலுபிட்-ரானாவ் பிரதான சாலையைக் கடக்கும்போது விரைவுப் பேருந்து மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 24) பிற்பகல் 2.30 மணியளவில் பேருந்து மோதியதில் காயமடைந்த 78 வயதான பெண்மணி, தெலுபிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மணி நேரத்திற்குப் பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தார் என்று பெலூரான் மாவட்ட காவல்துறைத் தலைவர் காசிம் மூடா தெரிவித்தார்.
கம்போங் பாடோ அருகே நடந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 26 பேர் காயமடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்து கோத்தா கினாபாலுவில் இருந்து சண்டாக்கான் நோக்கி சென்று கொண்டிருந்தது என்றும், குறித்த பெண்மணி திடீரென சாலையைக் கடந்ததால் பேருந்து ஓட்டுநரால் சரியான நேரத்தில் நிறுத்த முடியவில்லை என்றும் அறியமுடிகிறது என்று அவர் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் (1987) பிரிவு 41(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக காசிம் மூடா கூறினார்.