பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக இந்து மதத்தை சார்ந்த இளம்பெண் போலீஸ் டி.எஸ்.பி ஆகி சாதனை

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து வரும் இந்து மத பெண் ஒருவர் அரசு வேலையில் அதுவும் போலீஸ்துறையில் உயர் பதவியை பிடித்து சாதித்து இருக்கிறார், அவரது பெயர் மனிஷா ரூபேட்டா ( வயது 26). பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாகோபாபத் என்று இடத்தை சேர்ந்தவர். தனது 13-வது வயதில் இவர் தந்தையை இழந்தார். தந்தை இறந்ததும் மனிஷாவின் தாயார் குடும்பத்துடன் கராச்சியில் குடியேறினார். மனிஷா ரூபேட்டாவுக்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். அனைவரையும் அவர் கஷ்டபட்டு படிக்க வைத்தார். இதனால் 3 சகோதரிகளும் மருத்துவம் படித்து தற்போது டாக்டராக உள்ளனர். தம்பி மருத்துவம் படித்து வருகிறார்.

இப்படி அனைவரும் மருத்துவ துறையில் உள்ளதால் அவர் தாய் ஆசைப்பட்டது போல் மனிஷா ரூபேட்டாவும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு எழுதினார். ஆனால் அதில் ஒரு மதிப்பெண்ணில் அந்த வாய்ப்பை அவர் தவற விட்டார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை.போலீஸ் துறையில் உயர் பதவிக்கான தேர்வை எழுதினார். இந்த தேர்வில் அவர் 468 பேரில் 16-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.  இதன்மூலம் அவர் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் துணை போலீஸ் சூப்பிரெண்டாக தேர்வாகி உள்ளார். தற்போது அவர் பயிற்சியில் உள்ளார். விரைவில் மனிஷா ரூபேட்டா டி.எஸ்.பியாக பதவி ஏற்க உள்ளார்.

பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் டி.எஸ்.பி.யாக தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- சின்ன வயதில் இருந்தே நானும் எனது சகோதரிகளும் டாக்டர் அல்லது ஆசிரியை ஆக வேண்டும் என்பதற்காக விடா முயற்சியுடன் கடுமை யாக படித்தோம். அவர்கள் டாக்டர்களாகி விட்டனர் எனக்கு மருத்துவ நுழைவு தேர்வில் ஒரு மார்க் குறைந்ததால் அதனை படிக்க முடியவில்லை. இதனால் போலீஸ் துறை மீது எனக்கு இருந்த ஆர்வத்தால் அதற்காக அரசு பணியாளர் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். சமூகத்தில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் நான் இந்த பணியில் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here