ஈரான் மீது பாகிஸ்தான் வான் வழி தாக்குதல்; 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

இன்று ஈரான் மீது பாகிஸ்தான் நடத்திய வான் வழி தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 4 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் அல்-அட்ல் அமைப்பின் நிலைகள் மீது ஈரான் கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர், 3 பெண் குழந்தைகள் படுகாயமடைந்தனர் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை பாகிஸ்தான் விமானப்படை ஈரான் மீது பதிலடி வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஈரானில் உள்ள தீவிரவாத நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தானும் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில் 4 குழந்தைகள், 3 பெண்கள் என ஏழு பேர் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை, இரு அண்டை நாடுகளிடையேயான ராஜீய ரீதியிலான உறவை சீர்குலைத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தானில் பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் நடக்கக்கூடும் என நம்பகமான உளவுத்துறை தகவல் வந்ததன்பேரில், இன்று காலை தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பை அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கும் அசைக்க முடியாத உறுதியின் வெளிப்பாடாகும்’ என குறிப்பிட்டுள்ளது.

ஈரானும், பாகிஸ்தானும் பரஸ்பரம் தாக்கிக்கொள்ளக்கூடும் என நீண்ட காலமாகவே சந்தேகம் இருந்தன. ஏற்கெனவே இஸ்ரேல் – ஹமாஸ் போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம், நிலையற்றத்தன்மை நீடித்து வரும் நிலையில், தற்போது ஈரான் – பாகிஸ்தான் பரஸ்பர மோதல் இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஈரானில், ‘இஸ்லாமிய அரசு’ என கூறப்படும் அமைப்பு, நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 90-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஈரான் கடந்த திங்கள்கிழமை, ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. மேலும், ஈராக் தனது தூதரை ஈரானில் இருந்து திரும்பப் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here