ஜார்ஜ்டவுன்:
பிறை ஆற்றில் நீருக்கடியில் உள்ள குழாய் இன்று செவ்வாய்கிழமை மீண்டும் வெடித்தது தொடர்பாக, வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட 13 வினாடி வீடியோ, ஆற்றின் மேற்பரப்பில் இருந்து தண்ணீர் வெளியேறுவதைக் காட்டுகிறது.
குறித்த காணொலியில் குழாய் மீண்டும் வெடித்ததாக கூறும் ஒரு மனிதனின் குரல் கேட்கிறது.
முதல்வர் சவ் கோன் இயோவும் குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளதுடன் பிறை ஆற்றின் நீருக்கடியில் உள்ள குழாய் உடைந்ததாகக் கூறினார்.
“அன்புள்ள பினாங்குவாசிகளே, தயவு செய்து அமைதியாக இருங்கள், மேலும் பினாங்கு நீர் வழங்கல் கழகம் மூலம் விரைவில் தகவல்கள் வழங்கப்படும்” என்று அவர் Facebook இல் வெளியிட்டுள்ள ஒரு இடுகையில் தெரிவித்தார்.
இந்நிலையில் பினாங்கு நீர் வழங்கல் கழகம் (PBAPP) facebook இல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “நீருக்கடியில் உள்ள பைப்லைன் பிரிவில் 1,350 மிமீ ஆழத்தில் திடீரென பெரிய கசிவை தாம் கண்டறிந்துள்ளதாகவும், அதனை தாம் குறைந்த அமுக்கத்திலான நீர் வழங்கலை அமல்படுத்திக்கொண்டு, நீர் வெட்டு இல்லாது குழாய் வழியாக தண்ணீரை பம்ப் செய்ய முயற்சிக்கிறது” என்று தெரிவித்தது.
இதனால் தீவின் தென்மேற்கு மாவட்டம் மற்றும் செபெராங் பிறையில் உள்ள சில பகுதிகளில் உள்ள சுமார் 200,000 நுகர்வோருக்கு திட்டமிடப்படாத நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக PBAPP அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.