மஞ்சுங்:
செம்பிட் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மூன்று நண்பர்கள், நீரில் அடித்துச்செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் மூன்று பதின்ம வயது இந்திய வம்சாவளிச் சிறுவர்கள் சியூ தர்மராஜ் (வயது 14), ஜி. சரத் (வயது 16), மற்றும் தி. ஈஸ்வரபிள்ளை (வயது 16) என அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.03 மணியளவில் தகவல் கிடைத்ததும், பந்தாய் ரெமிஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று கூறினார்.
“சுங்கை செம்பிட்டில் மீன்பிடித்துக்கொண்டும், குளித்துக்கொண்டிருந்த போதும் நீரில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
“தீயணைப்பு வீரர்கள் நீர் மேற்பரப்பில் தேடல் முறைகளைப் பயன்படுத்தி தேடியபோதும் அவர்கள் நேற்று கணிடுபிடிக்கப்படவில்லை. குறித்த சிறுவர்களை தேடும்பணி இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
கே9 கண்காணிப்பு நாய்ப் பிரிவினர் இன்று காலை 8 மணிக்கு தேடும் பணிகளை தொடங்கினர். மொத்தம் ஐந்து படகுகளை கொண்டு இந்த பணிகள் தொடர்கிறது என்று அவர் மேலும் கூறினார்.