19 வயதில் ‘தங்கல்’ பட நடிகை சுஹாசினி பட்நாகர் காலமாகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பாலிவுட் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான பாலிவுட் திரைப்படம் ‘தங்கல்’. பாலிவுட் மட்டுமல்லாது இந்திய ரசிகர்களையும் இப்படம் கவர்ந்தது. இந்த படத்தில் அமீர்கான் கதாநாயகனாக நடித்திருப்பார். மேலும், இந்தப் படத்தில் ஜூனியர் பபிதா போகத் கதாபாத்திரத்தில் சுஹாசினி பட்நாகர் நடித்திருந்தார். தற்போது 19 வயதாகி இருக்கும் சுஹாசினி அகால மரணம் அடைந்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஹாசினிக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் எடுத்த சிகிச்சைதான் அவருக்கு எமனாக அமைந்து விட்டது. இந்த சிகிச்சையால் அவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு உடல் முழுவதும் அளவுக்கதிகமான திரவம் நிரம்ப ஆரம்பித்தது. இதனால் மரணம் ஏற்பட்டுள்ளது. இவரது இறுதிச்சடங்குகள் ஃபரிதாபாத்தில் இன்று நடைபெற இருக்கிறது.

பாலிவுட்டில் பிரபல குழந்தை நட்சத்திரமான சுஹாசினிக்கு ‘தங்கல்’ படத்திற்குப் பிறகு நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தது. ஆனால், படிப்பில் கவனம் செலுத்திவிட்டு பின்பு நடிக்கலாம் என்ற முடிவில் வந்த வாய்ப்புகளை தவிர்த்தார் சுஹாசினி. 19 வயதாகும் சுஹாசினியை மீண்டும் சீக்கிரம் திரையில் பார்க்கலாம் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இடியாக வந்து இறங்கியிருக்கிறது அவரது இறப்புச் செய்தி.





















