படப்பிடிப்பில் நடிகையை அடித்த இயக்குநர் பாலா!

தற்போது ‘வணங்கான்’ படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் பாலா தன்னை அடித்ததாகவும் அதனால், அந்தப் படப்பிடிப்பில் இருந்து தான் விலகியதாகவும் நடிகை மமிதா கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

’நந்தா’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்றப் பல படங்களை இயக்கியவர் பாலா. இவரது படங்களின் கதாநாயகர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பி, சமூகத்தோடு அதிகம் ஒட்டாதவர்கள் என இயல்புக்கு மாறாக கதைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்கள். நடிகர் விக்ரம் மகன், துருவ் விக்ரம் நடிப்பில் இவர் இயக்கிய ‘வர்மா’ படம் டிராப் ஆனது. அதன் பிறகு சொந்த பிரச்சினைகளாலும் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் இயக்குநர் பாலா.

தற்போது ‘வணங்கான்’ மூலமாக மீண்டும் திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார். இந்தப் படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமான நிலையில், இந்தக் கதை தனக்கு ஒத்துவராது எனச் சொல்லி நடிகர் சூர்யா விலகினார். படப்பிடிப்பின் போது, நடிகர் சூர்யாவுக்கும் பாலாவுக்கு பிரச்சினை என்று தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து சூர்யா- பாலா தரப்பில் எதுவும் விளக்கம் கொடுக்கவில்லை.

சூர்யா விலகிய பிறகு அந்தக் கதையில் நடிகர் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், ‘பிதாமகன்’ விக்ரம் போல இந்த டீசர் முழுக்க அருண் விஜய் பேசாமல் இருந்தார். சூர்யாவைப் போலவே இந்தப் படத்தில் முன்பு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த கீர்த்தி ஷெட்டியும் தேதி பிரச்சினைகள் காரணமாக விலகினார். இப்போது அந்தப் படத்தில் இருந்து விலகிய மற்றொரு நடிகையான மமிதா, தான் படத்தில் இருந்து விலகியதற்கான காரணமாக பேசியிருக்கும் சமீபத்தியப் பேட்டி வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில் நடிக்கும் போது மூன்று டேக் வாங்கியிருக்கிறார் மமிதா. இதனால், டென்ஷனான இயக்குநர் பாலா, கோபத்தில் மமிதாவை அடித்திருக்கிறார். இது குறித்து மமிதா, தனது பேட்டியில் கூறியிருப்பது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்து வரும் ரசிகர்கள், ‘பாலா இன்னும் மாறவே இல்லையா?’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here