கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள 100,696 மருத்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அல்லது 54 விழுக்காட்டினர் 2022ல் பொதுச் சேவைத் துறையை விட்டு விலகியதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் தனியார் துறைக்குச் செல்ல விரும்பியதே அதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது.
பொதுச் சேவைத் துறையை விட்டு விலகிய மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கையில், 45 விழுக்காட்டினர் தற்போது வெளிநாடுகளில் வேலைசெய்கின்றனர் என்று தமது அமைச்சின் கருத்தாய்வு முடிவுகள் காட்டியதாக சுகாதார அமைச்சர் டாக்டர்.ஸுல்கிஃப்லி அகமட் நாடாளுமன்றத்தில் கூறினார்.
அதோடு 28 விழுக்காட்டினர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவர்கள் பொதுத் துறையில் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாக அமைச்சர் கூறினார்.
அதோடு, 2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையே 9,822 மருத்துவர்கள் நிரந்தரப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
குறிப்பிட்ட படிப்புகளுக்காக அரசாங்கம் சலுகைத் திட்டங்களையும் வழங்குவதாக டாக்டர் ஸுல்கிஃப்லி கூறினார்.