கிள்ளான்:
பெற்ற தாயை ‘பூட்ஸ்’ காலணி, சுத்தியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி அடித்துக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் சிலாங்கூரின் கிள்ளான் நகரில் நேற்று (பிப். 28) இடம்பெற்றுள்ளது.
55 வயது தாயாருடன் குறித்த 33 வயது மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த சந்தேக நபர், தாயாரை அடித்துக் கொலை செய்த பிறகு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஷா அலாம் காவல்துறை தலைவர், ஆணையர் முகமட் இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த ஆடவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் சிறு நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் போதைப்பொருள் பாவித்திருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கு முன்பு அவர் போதைப்பொருள் குற்றங்கள் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்று கூறிய அவர், இவ்வழக்கு கொலைக்கான குற்றவியல் தண்டனைச் சட்டம் 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.