கோலாலம்பூர்:
மலேசியாவில் சில மணி நேரம் பிச்சை எடுப்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 ரிங்கிட் பெற்று வந்த பிச்சைகாரரின் உதவித்தொகையை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
உதவித்தொகை நிறுத்தப்பட்ட அந்த பிச்சைக்காரரிடம் SUV வகை ஆடம்பர கார் ஒன்றும் உள்ளது.
மேலும் அவர் காலை நேரங்களில் பேருந்து நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கு செல்கிறார், அதன் மூலம் அவர் மாதம் 2,000 ரிங்கிட் சம்பளமாக பெறுகிறார் என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மார்ச் மாதத்திலிருந்து அவருக்கு மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த 450 ரிங்கிட் உடற்குறைக்கான உதவித்தொகை நிறுத்தப்படும் என்று பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சுக்கான துணையமைச்சர் நோரய்னி அகமட் நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச் 12) உறுதிப்படுத்தினார்.
பெயர் குறிப்பிடாத அந்த நபருக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது என்றும், அவர் இனி பிச்சை எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக பிப்ரவரி 21ஆம் தேதி பாகாங் மாநிலத்தின் மாரான் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஸ்ரீஜெயா இரவுச் சந்தையில் பிச்சை எடுப்பதை ஒழிக்கும் நடவடிக்கையின்போது அந்த ஆடவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.





















