ஹாங்காங்:
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தின்போது ஹாங்காங் சட்டமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 12 பேருக்கு ஹாங்காங் நீதிமன்றம் சனிக்கிழமையன்று (மார்ச் 16) நான்கு முதல் ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்தது.
சீன ஆட்சியின்கீழ் இருக்கும் ஹாங்காங்கில் பலமாத காலம் போராட்டம் நீடித்த நிலையில், இந்த நிகழ்வு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஹாங்காங்கில் முன்மொழியப்பட்ட, புதிய ‘நாடுகடத்தும்’ சட்டத்தின்படி, நீதி விசாரணைக்காக ஹாங்காங்வாசிகளைச் சீனாவிற்கு நாடு கடத்த முடியும். அதனை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த 2019 ஜூலை 1ஆம் தேதி ஹாங்காங் சட்டமன்றத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அதன் சன்னல்களை உடைத்து நொறுக்கி, முழக்கமிட்டனர்.
தண்டனை விதிக்கப்பட்டோரில் 45 வயதான நடிகர் கிரகரி வோங்கும் ஒருவர். அவருக்கு ஆறாண்டு இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தான் குற்றமிழைக்கவில்லை என்று அவர் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அவருடன் வென்டஸ் லாவ், ஓவன் சோ என்ற இரு அரசியல் ஆர்வலர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.