கிள்ளான் வெயிர் ஆற்றின் அருகே நேபாளி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

கோலாலம்பூர்:

ஜாலான் கெராபு 17/52, ஷா ஆலம், 17வது பிரிவில் உள்ள கிள்ளான் வெயிர் ஆற்றின் அருகே நேபாள நாட்டு ஆடவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

காலை 11.56 மணியளவில் கிள்ளான் வெயிர் ஆற்றின் அருகே ஒரு சடலம் மிதப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும், சடலத்துடன் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டின் நகல் மூலம், அந்த நபர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது என்றும், ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

“குறித்த சடலத்தின் உடல் முழுவதுமாக ஆடை அணிந்த நிலையில் காணப்பட்டது” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தடயவியல் திணைக்களத்தின் மேலதிக பரிசோதனையில், மரணம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக அவர் போராடியதற்கான அறிகுறிகள் அல்லது பிற காயங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும் “இறப்புக்கான காரணத்தை அறிய சடலம் இன்று காலை 9 மணிக்கு பிரேத பரிசோதனைக்காக ஷா ஆலாமுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

சம்பவம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி முகமட் ஷாருல் பக்ரியை 012-3630512 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here