இஸ்கந்தர் புத்திரி:
இங்குள்ள பொழுதுபோக்கு மையத்தில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் மொத்தம் 44 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓப்ஸ் கெகர் என்று பெயரிடப்பட்ட இந்த சோதனையானது, பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 15) நள்ளிரவு 12.10 மணிக்கு நடத்தப்பட்டது” என்று, ஜோகூர் குடிநுழைவு துறை இயக்குனர் பஹாருடின் தாஹிர் கூறினார்.
“சரியான அனுமதிகள் இல்லாமல் நாட்டுக்குள் நுழைந்து, ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர, வெளிநாட்டு நபர்கள் இங்கு தங்கி வேறு வேலைகள் செய்வது போன்ற புகார்களும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
“கைது செய்யப்பட்டவர்களில் பொழுதுபோக்கு மையத்தில் ‘வரவேற்பு பெண்களாக’ பணிபுரியும் 42 வெளிநாட்டுப் பெண்களும் அடங்குவர்.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சேவைக்காக RM50 முதல் RM500 வரை ஊதியம் பெறுவது விசாரணையில் தெரியவந்தது,” என்று அவர் இன்று திங்கள்கிழமை (மார்ச் 18) வெளியிட்டுள்ளொ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அப்பெண்களைத் தவிர “சீனா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த இருவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட அனைவரும் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்” என்றார்.
குடி நுழைவு சட்டம் 1959/1963 இன் பிரிவு 15(1)(c) இன் கீழ் அதிக காலம் தங்கியதற்காகவும், 1963 குடியேற்ற விதிமுறைகளின் விதி 11(7)(a) PLS ஐ மீறியதற்காகவும் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.