சுங்கை பூலோ:
ஜாலான் இண்டஸ்ட்ரி 5, கம்போங் பாரு சுங்கை பூலோவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிற்சாலைகள் எரிந்து நாசமாயின.
குறித்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு மாலை 5.38 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர், அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
அவரது கூற்றுப்படி, சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், டாமன்சாரா, ரவாங், செலாயாங், பத்து அராங், சுங்கை பினாங் மற்றும் ஷா ஆலாம் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து மொத்தம் 54 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குறித்த தீ விபத்தில் 5 தொழிற்சாலைகள் 80 விழுக்காடு எரிந்துவிட்டிருந்தன. தீயை அணைக்கும் முயற்சிகள் இரவு 7.40 மணியளவில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அஹ்மட் முக்லிஸ் கூறினார்.